ஐயன் பந்தி - 8

புவியேழையும் பூத்தவளே - 4

சிவந்த முலை வரிசைகள் குலுங்க, உடல் எல்லாம் கரிய மயிர் அடர்ந்து, கொடுவாயின் இருப்புறமும்  இருகோடுகள் வளைந்து மேல் ஏறியிருக்க, தலை பருத்தும், உடல் சிறுத்தும் மண்ணை முகர்ந்து மூச்சால் கலைத்துக் கொண்டு, கொடுவாள்கள் என நீண்ட நகங்களோடு ஊர்ந்த படி வந்தது ஒரு மலைப்பன்றி. அவள் அங்கிருப்பதை அறிந்தது போல மதர்ப்பும்,  உருமலுமாக வந்தது ஒரு ஆண் பன்றி. அடர்ந்த காட்டின் இருளுக்குள் இருள் என நின்றன இரண்டும். கைகோர்த்த இலைத்தழைப்புகளின் இடைவெளி வழி  ஒளி அவற்றின் உடல்களில் சிந்தியிருந்தது. குறுங்காதுகள் சிலிர்க்க முகம் நிமிர்ந்து அவள் உருமினாள். அவன் இரண்டடி பின் வைத்தான். வால் சுழற்றி பின்னகர்ந்தவள்,  அறியும் முன்னும் பாய்ந்து முன்னேறினாள். அதே வேகத்தில் அவனும் பாய்ந்தான். பருத்த தலைகள் மோதி ஒலித்தன. மூச்சு சீரியபடி பின்னகர்ந்தனர் இருவரும்.   மோதியும் விலகியும் சுழன்றனர். எதிர் நின்று பாய்ந்து கோடு உரச தாக்கிக்கொண்டனர். பல பல முறை முட்டி முட்டி விலகினர். பாய்ந்து அவன் மோத வருகையில் தன் விலாவும் குறியும் காட்டி வால் சுழற்றி திரும்பி அவன் மோதும் முன் விலகினாள். தொடுத்த அம்பென அவன் எதிரில் நின்ற அடிமரத்தில் மோதிட, கிளைகள் அதிர்ந்து இலைகளும் மலர்களும் உதிர்ந்தன. பாய்வது போல பாய்ந்து அழகு காட்டினான்.  பாய்தலும் அடங்கலுமாக பொழுதும் சுழன்றது. மண்ணில் வளைந்த பற்கள் மூழ்க முனகி, எதிர் எதிராக ஒரு கோடு இழுத்த படி வந்து ஒருவரை ஒருவர் சந்தித்து முகர்ந்து கொண்டனர். கூடினர் கூடிக்கலந்தனர் கலந்து விலகினர். விலகிய வேகத்தில் முகத்தால் கீறிய மண் தரையில் சிதறி விழுந்தன துளிகளென வெண்குருதியும் செங்குருதியும் கலந்து. முளைத்தன,  முளைத்து கரிய முத்துக்கள் என எழுந்தன. ஒன்று நூறு என பெருகின. ஊர்ந்தன, நகர்ந்தன, கால்கள் ஊன்றி நடந்து, மண்ணை நுகர்ந்து அன்னையின் வாசம் கண்டு அவள் முலையை அண்டின. அப்பன் நால் புறமும் சுற்றி  தன் கால்களால் வேலியிட்டான்.

மலைக்காணி சொன்ன கதையையே கனவெனக் கண்டு பங்குனி மாதத்தின் வெப்பம் அடர்ந்து உடல் வியர்க்க விழித்த போது விடியத் துவங்கியிருந்தது. அறியாத புது மணம் ஒன்று எழுந்தது. தொடை இடுக்குகள் ஈரமாகியிருந்தன. நெற்றியிலும், கன்னத்திலும் ஒரு சின்ன குறுகுறுப்பு. கைவைத்து பார்த்த போது வேர்க்குரு போல ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. தெருவில் பாத்தோய்ந்து  ஓயும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. கீழ் புறம் கூடத்தில் ஒன்றிரண்டு தறிகளில் ஆள் இறங்கி, நெசவொலி எழுந்தது. மேல வீட்டில் பாவோடியில் ராட்டிணம் சுழல, கண்டுகள் கறக்கும் ஒலி கேட்டு கொண்டிருந்தது. 

இன்றைய முழு நிலவில் தான் சிவப்பாயிக்கு படையல். மலைக்காணிகளின் மூன்றாவது அம்மை. பன்றி போல் மதர்த்த உடலும், சிவப்பாடையும், மூன்று முகமுமாக இருப்பவள் என அன்று இரவு மலைக்காணி சொன்னார். உடலில் தசையென திரண்டு அழகென பொலிந்து ஈர்ப்பவள்.  சிவந்த காந்தள், அலரி மலர்களை பறித்து தொடுத்து இட்ட மாலையோடு, பச்சை ரத்தம் விட்டு பிசைந்த அன்னத்தை  படையலாக கொள்பவள். ஓலைப்பாய் விரித்து, வேகவைத்த முழுக்கம்பு அன்னத்தை கொட்டி, இளம் மான் கிடாவொன்றை பலியிட்டு, குருதியை அன்னம் குளிர விட்டு பிரட்டி, மூன்று உருண்டையாக பிடித்து இடது ஒன்றும், வலது ஒன்றும், அந்தரத்தில் ஒன்றுமாக வீசுவார்கள்.  கோரமும் அழகும் ஒன்றென பொலிபவள். அவளது ஒரு முகம் குளிர்ந்தது, ஒன்று தகிப்பது. மற்றது குளிரும், தகிப்பும் ஒன்றென அமைவது. துணிக்கட்டிலின் பள்ளத்தில் கிடந்து, வெம்மையா, குளிரா என்று அறியமுடியாத இனிமைக்குள் இருந்தபடி மலைக்காணி சொன்ன மூன்றாம் கதையை எண்ணிக்கொண்டிருந்தேன்.

மூப்பனும் இளையானும் காட்டுக்கொடியால் கட்டி இளம் மான் ஒன்றை இழுத்துக்கொண்டு  மேல மலை ஏறினார்கள். "மூனு சுடர் உண்டுடா, அந்த மூனால தான் இந்த உலகமே இயங்குது" என்றார் மூப்பன்.

"அது என்ன மூப்பா மூனு சுடரு" என்றான் இளையான்.

"இரண்டு சுடரு நாம கண்ணால காண்கிறது, ஒன்னு சூடு ஒன்னு குளிரு, அதைத்தான் கதிர்னும், நிலவுனும் சொல்றோம்" 

"மூனாவது?"

"சொல்றேன் டா,  அதுக்குள்ள என்ன தாவுற இளங்குட்டி கணக்கா? "

"மூனாவது நம்ம கண்ணால காங்குறதாவும் இருக்கும், காண முடியாததாவும் இருக்கும், அதை தான் நெருப்புங்கிறோம். மின்னல்ல ஒளியா, விளக்குல, அடுப்புல, காட்டுல தீயா எரியுறப்போ, அது நம்ம கண்ணுல படும். அதே நெருப்பு தான் நம்ம கண்ணுல படாம ஒவ்வொரு உசுருக்குள்ளையும் மறைஞ்சிருக்கிறதும். அந்த நெருப்பாலதான் உடம்புல சூடு நிலைக்கது. அன்னத்தை எரிக்கிறதும், உடம்ப உண்டாக்கிறதும் அதுதான். இந்த நெருப்பு அவிஞ்சா உடம்பு குளுந்து போயி, உடம்ப விட்டு உசுரும் போயிடும்.  இந்த  மூனு சுடரும் தான் அம்மைக்கு மூனு முகங்க. அவ வலது புறத்து முகம் கதிரு, இடது புறத்து முகம் நிலா.  குளிரும், சூடுமா அத்தன உசுருக்குள்ளையும் ஒளிஞ்சிருக்கது தான் நடுவில இருக்கிற மூனாவது முகம். எல்லா உசுருக்கும் மனசுக்குள்ள மலைப்பாறைல கீறி வச்ச மாதிரி  தான் முளைக்கணும் பரவணுமுங்கிற எண்ணம் இருக்கும். அதுக்கு ஏதுவா அந்த உசுருகளோட உடல நிறைக்கிறவ சிவப்பாயி.  கானுசுர்க ஆணும் பெடையுமா உடம்பு முறுக்கேறி திரியிறதும், அனையறதும் இவளால தான். மண்ணுக்குள்ள விதைச்ச விதை, வேரை ஊனி எழுந்து பூமிய துளைச்சு முளைக்கது உள்ள மறைஞ்சிருக்க இதே தீயால தான்" என்றார் மூப்பன்.

"இவதான பன்னியா வந்தவ இள மூப்பன் முன்னால?"

"ஆமாம். அதுக்கு முன்ன நாம விதைச்சு பழக்கம் இல்லை, எப்படி விதைக்கணும்னு தெரியாது. ஆண் பன்னியும் பெண்  பன்னியுமா வந்து இளமூப்பனுக்கு,  இவதான் மண்ணைக்கீறி விதைக்க சொல்லிக் கொடுத்தவ. காட்டு பன்னியோட முகத்தையும் வளைஞ்ச கோட்டையும், அது மண்ணைக் கீறி கிழங்கு எடுக்குற வித்தையும் கண்டு, மரத்துண்டு ஒன்ன தேச்சும் செதுக்கியும் கலப்பையா கட்டி  நிலத்தை கீறினான் இளமூப்பன் முதன் முதலா.  சிவப்பாயி  காட்டினபடிக்கு கலப்பை கட்டியதால, இப்பவும் உழவுக்கும் மத்த புழக்கத்துக்கும் கருவியெல்லாம் செய்றது செம்மலை குடிக்காரங்க தான்"

கோவிந்தன் தாத்தா வீட்டிற்கு சென்ற போது, காலையிலேயே வந்திருந்த ஐயர், திண்ணையில் அமர்ந்திருந்தார். அவர் குடித்துவிட்டு வைத்த மோர் செம்பு அருகில் இருந்தது. பாக்கை வாயில்  அதக்கியபடி, வெற்றிலையை நரம்பு கிள்ளி, சுண்ணாம்பை தீட்டிக்கொண்டிருந்தார். 

என் தலையைக்கண்டதும், பாட்டி முகத்தை பார்த்துவிட்டு "ஏல சுந்தரம் கொல்லையில துன்னுத்து பச்சில இருக்கு, இரண்டு இலை பறிச்சுட்டு வா" என்றாள். பறித்து வந்து கொடுத்ததும், நிலைவாசல் கல் படியை கையால் தூற்றி சுத்தம் செய்து விட்டு, இலைகள் இரண்டையும் அதில் வைத்து, வெற்றிலை உரலின் சிற்றுலக்கையை வெற்றிலை இடித்த முனையில் கைபடாமல்,  மாற்றி பிடித்து, உலக்கை காம்பால் பச்சிலையை நசுக்கினாள்.  

"உட்காருடா" என்றாள் என்னை அவள் அருகில். அமர்ந்ததும் நெற்றியிலும், கன்னத்திலும் குறுகுறுத்த பருக்களின் மீது சாற்றை பூசினாள். "கருக்காம, அப்படியே பட்டிரும்,  ஊருதுனு பிச்சு போட்டிறாத" என்றாள்.

"பிள்ளாண்டன் வளந்துட்டான்" என்றார் ஐயர். கோவிந்தன் தாத்தா சிரித்துக்கொண்டார். 

"இந்த ஆனமந்தி வைத்தியர் ஏடெல்லாம் விசித்திரமா இருக்குடா கோவிந்தா" என்றார் ஐயர்.

"ஏன் டா" என்றார் கோவிந்தன் தாத்தா.

"அவர் உடம்போட ஒவ்வொரு தாதுவையும் அறிஞ்சிண்ட விதமெல்லாம், கல்பனையே பண்ண முடியல. கனவும் நனவுமா பலதும் நடக்குது" என்றார் ஐயர் 

"அவர் மந்திரத்து வழியாவுல தெரிஞ்சுக்கிறாரு. அது நம்மால விளங்க முடியாதுனு தான் நினைக்கேன். அதான் அந்த ஓலைய கொடுக்கும்போதே, மந்திரம் இல்லாம படிச்சா விளங்காதுனு உங்க பெரியாளுகிட்ட வைத்தியர் வீட்டாளுக சொன்னாகனு சொன்னியே"

"உள்ளது தான். பலரும் தெய்வம் போல வந்து சொல்லிக்கொடுத்துட்டும் போறா, ஆனாலும் சில விஷயங்கள இரண்டாம் பேர் அறிவிக்காமலே இவர் எப்படி உணர்ந்துண்டார்னு குழப்பமா தான் இருக்கு. இவர் அனுபவங்களையும், இவர் படிச்சிண்டு இருந்த ஆயுர்வேதத்தையும் சேர்த்து எழுத்திணுட்டாரோனு  ஒரு எண்ணம்."

பாட்டி சொன்னாள்,  "சில விஷயங்க அப்படித்தான இருக்கு சாமி? ஒரு பொண்ணு புள்ளை உண்டாகி பேறு காலம் வரைக்கும் அத்தன பேர் உதவி வேண்டிய இருக்கு. ஆனா, காட்டுல சினை  பிடிக்கிற மிருகங்களுக்கு யாரு சொல்லிக்கொடுத்தா? அதோட உடம்புல இருந்து மனசு அறிஞ்சுக்குதுல. ஆடடோட சினை வாசம் கண்டா கிடா அண்டாது.  அது அதுக்கான வழிய அதுக பிறப்பாலையே அறிஞ்சு வச்சிருக்குக"

"அதுவும் சரிதான் தாயி. சிலது அவர் எங்கயோ படிச்சத குறிப்பா எழுதி வச்சிண்ட மாதிரியும் தோன்றது" என்றார் ஐயர்.

"அடுத்த ஏடு என்னடா? மாம்சத்தை பத்தியா?" என்றார் தாத்தா.

"ம்" என்றுவிட்டு ஐயர், ஆனமந்தி சுப்பிரமணிய வைத்தியர் மாம்சம் குறித்து எழுதியதை அவர் எழுதியபடி சொல்ல துவங்கினார். பித்தா நினைவா கனவா என்று சொல்லமுடியாதபடி சென்றது கதை. 

இருள் விலகாத கருக்கலில், முந்திய இரவின் மைதூன வாடை கலைய, குளத்தில் இடுப்பளவு நீரில் நின்று மூன்றாம் முறை முழுகி எழுந்த போது கிழக்கே மின்னும் வெள்ளி வாள் ஒன்று முளைத்து இருண்ட தொடு வானத்தை கீறி கீழிறங்கி எதிரில் கரிய நிழல் என தலை விரித்த நின்ற அரச மரத்தையும் இரண்டாக பிளந்தது. மலைகள் பிளந்து சரிந்து உருளும் பேரொளி மயிர் சிலிர்க்க என் உடலை முற்றிலும் மூடி பொதிந்தது. சில கணங்களோ, பல யுகங்களோ என அறியமுடியாமல் காரிருளும், ஒலியின்மையும், இடைக்கு கீழ் நீரின் கொடுங்குளிர் மட்டுமே சூழ நின்றேன். பின் ஒன்றுமே இல்லை. நினைவு விழித்த போது நீரடியில் நின்ற வலது காலில் பெரு விரல் முனையில் தீண்டல் என உணர்ந்த சிறு வலி, ஊசி முனையின் துளியென்று உதித்து, சுள்ளென்று தைத்தது ஒரு முள்ளென. அத்தனை விரல்களும் துடித்தன. நகங்கள் அற்று விழுந்து காந்தின. பதித்த இருபாதமும் விதிர்த்து விண் விண் என்றது. கரண்டையில் கனன்று முழுங்கால் ஏறியது. மூட்டுகள் இற்று தொடைகள் பழுத்தன. துடை இடுக்குகள் துடித்தன. விதைகள் வலிக்குள் மூழ்க, குதவாய் விரிந்தது. உறுப்பு நமைத்தது. இடைமுறிய பிருஷ்டங்கள் கனத்தன. குடல்கள் வெடிக்க, முதுக்குத்தண்டு உப்புத்துகள் என்று உதிர்ந்தது. வயிறு நிறைந்தது அமிலத்தால். இருதயம் வீங்கி கன்றிட, நுரையீரல்கள் அழுந்தி இறுகியது. தோளோடு வெட்டி விழுந்த கைகள் எங்கோ துடித்தன. குரல்வளை நெறிபட கீழ்த்தாடை உருகி அதனுள் ஒழுகியது. கன்னங்கள் பறித்தன. கண்கள் கருமையை மட்டும் அறிந்து தெறித்திட, இரு காதுகளுக்கும் இடையே துளை ஒன்று முளைத்து இருபுறமும் முடிவிலி வரை நீண்டது. மயிர்கள் கருகி  உதிர்ந்து வெடித்து பிளந்த கபாலத்தினுள் மூளை டப் டப் டப்பென கொதித்து முறியும் ஒலியை அதுவே அறிந்தது. நரம்புகள் இற்று முறுகின. நெருப்பில் இட்ட பிணம் போல துடித்து வளைந்து எழுந்தது வலி. வலியென்றே உயிர்த்த மாம்சத்தை ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு துளியிலும் அறிந்தேன். வலி என்ற ஒன்றுமட்டுமாய் ஆனது அண்டம். உடலுக்கு அப்பாலும் வலியே நிறைந்தது. 

திடுமென முளைத்து வந்த துளி நெருப்பொன்று உச்சந்தலையில் விழுந்தது. குளிர்ந்து நீரென இறங்கியது. துளித்துளியாய் நெருப்புக்குஞ்சுகள் விழுந்த படியே இருந்தன. ஒன்று சிரசிலும், ஒன்று  தோளிலும் என உடல் எங்கும். விழும்தோறும் குளிர்ந்தன. உடல் தணிந்தது. மீண்டும் கண்கள் திறந்த போது இரண்டு ஆள் உயரம் நின்ற நடுமரம் அகண்ட விளக்கில் இட்ட திரிபோல மூன்று இழைகளோடு செந்நிறத்தில் எரிந்து கொண்டிருந்தது. செந்நிற ஒளியையே வடிவெனக்கொண்டு மூன்று முகங்களுடன் லாஹினி தேவி எழுந்து வந்தாள்.  அவளது வலப்புறத்து மேல் கரத்தில் மின்னர் படை ஒன்று எழுந்து வானை வெட்டியது மீண்டும். வலது கீழ்கரம் அஞ்சேல் என்று உரைக்க, இடது கரங்களில் சக்தி ஆயுதமும், தண்டமும் பற்றியிருந்தாள். சுற்றிலும் முறிந்து வீழ்ந்த கிளைகள் பத்து துண்டுகளாக நெருப்பில் முகிழ்ந்து ஒளி அரவுகள் என வடிவெடுத்து, டாமரீ, டங்காரிணீ, ணார்ணா, தாமஸீ, ஸ்தாண்வீ, தாக்ஷயணீ, தாத்ரீ, நாரீ, பார்வதீ, பட்காரிணீ  என அவளை சூழ்ந்து கொண்டன.  பத்து இதழ் கொண்ட செந்தாமரை மலர் ஒன்று  மலர்ந்தது மணிபூரகத்தில். 

ரக்தாக்கினியால் சமைந்து ரக்த தாதுவிலிருந்து மாம்சம் என தசை வடிவில் உதிப்பது அவளே.மனத்தில் உறுதி  என்றும், தைரியம் என்றும், தன்னம்பிக்கை என்றும் வெளிப்படுபவள். உடலில் திடமென்று பலமென்று வலுவென்றும் ஆனதெல்லாம் மண், செயலின் ஊக்கமென வெளிப்படுவது எல்லாம் நெருப்பு, அவள் அசைவெல்லாம் உதான வடிவாகிய காற்றால்.  உள் உறுப்புகளையும் உடற்கூட்டையும் போர்த்தியும், மூடியும் காக்கிறவள். அகங்காரத்தோடு கூடி  ஆத்மனும், ஞானத்தோடு கூடி பரமாத்மனும் செயல் புரிவது அவள் வழியாக.    தன்னிலிருருந்து ஏழு அடுக்ககளாக உருவாகிய தோலினால் பொதியப்பட்டு அதன் கதகதப்பில் நிலைத்திருப்பவள்.  நெற்றி, சென்னி, பிடறி, கண்கள், கன்னம், தாடைகள்,  கழுத்து, தோள்பட்டை, அக்குள், மார்பு, வயிறு,  கைகள், பாதங்களோடு மூட்டுகளிலும் முழுமையென்றும், அழகென்றும் மிளிர்பவள். ஆரோக்கியம், நீண்ட ஆயுள், எளிமை, கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை, பேராசையின்மை, செல்வம் ,  அறிவு,  மகிழ்ச்சி என்றும் பொலிபவள் . இழை இழையாக இருப்பதால் பிஷிதம் என்றும்,  வலிமையானதாகவும், அச்சமூட்டுவதாகவும் தோன்றுவதால்  க்ரவ்யம் என்றும், உடல் முழுதையும் போர்த்தி இருப்பதாலும், செயல்படும் திறன் கொண்டிருப்பதாலும் பலலம் என்றும்,  வெற்றி அடையும் ஆவலைத் தூண்டுவதால் அமிஷம் என்றும், உடலுக்குள் வலிமையென நிறைவதால் தரசம் என்றும்,  ரக்த தாதுவில் இருந்து தோன்றியதால் ரக்தோத்பவம் என்றும், மேதசை உண்டாக்குவதால் மேதாக்ருதம் என்றும் பெயர் அவளுக்கு.  

மழை, துளிகளால் ஆன அலையாக முகத்தையும் உடலையும் அறைந்து கொண்டிருந்தது. எழுந்து எறிந்த நெருப்பு அணைந்து குளிர்ந்து கரிந்து ஒழுகி மரத்தையும் துண்டுகளையும் முழுவதுமாக இழுத்துக்கொண்டு இறங்குவன போல குளத்தில் இறங்கியது.  உடல் குளிர, தாடைகள் நடுங்கி கிட்டித்து பற்கள் மோதின. தலையிலும், உடலிலும் ரோமங்கள் படிந்து நீராக ஒழுகி கொண்டிருந்தன. கால்களால் நீரை இழுத்து உளைத்த படி கரை ஏறினேன். உடுத்திய ஈரம் மேலும் மழையில் கணத்து ஈரமாக மெல்ல நடக்க துவங்கினேன் மனைநோக்கி. கரையிலும் வழியிலும் மண்ணை கறைத்துக்கொண்டு கால்களை தழுவியபடி ஓடியது மழை நீர். முன்னிரவின் நினைவு ஏனோ சட்டென்று எழ, அடங்காத புன்னகை ஒன்று மலர்ந்தது. மதம் ஒழுகும் களிறொன்றும் அதற்கு நிகர் நின்ற பிடியொன்றும் முகம் உரசின. மஸ்தகம் மோதின. நீண்ட துதிக்கைகள் நீட்டி பிடரியும், கழுத்தும், முதுகும், அடிவயிறும், கால்களின் மேல் திரண்டு தசையும் உரசின. கதுப்போடு கதுப்புரசி, வலப்புறம் சுழித்து துதிக்கைகள் கழுத்து வளைக்க பின்னின. பின் பிடிவிட்டு  சீரிய மூச்சொலியால் உடல் சிலிர்க்க கூவின, அழைத்தன. ஒன்றைழைக்க ஒன்று விலகியது ஒன்றழைக்க ஒன்று அணுகியது என மாறி மாறி ஆடின. பிடி யானை மெல்ல விலகி, சில அடிகள் கடந்து முகம் திருப்பி, முறச்செவிகள் உதறிய படி நின்றது. அதிராத அடிகள் வைத்து அணைந்தது களிற்றானை. கண்களால் அல்லாமல் உடலாலும், மணத்தாலும் அதை அறிந்தது பிடியாணை. மெல்ல கோட்டின் நுனி கொண்டு பிடியின் பிருஷ்டத்தில் சீண்டியது களிறு. பின் கனிந்த வேர் பலாவொன்றை விண்டு, கடித்து சுவைத்து, துதிக்கையால் தன் வாயமுதம் துழாவி எடுத்து ஊட்டியது பிடிக்கு. இனிப்பின் சுவை நாவறிய மயங்கிய பிடி பக்கம் திரும்பி ஒரு கால் உயர்த்தி, களிற்றின் மேல் சாய்ந்து கிறங்கியது. திடமென்றும் வலுவென்றும் உடலை அறிந்தது மனம்.  அள்ளி பற்றவும், அடங்கி மயங்கவும் திமிறியது. முற்றும் விழுங்கி சூழவும், விலகி விரியவும் ஆடின, ஆடி தோற்றன.  அடி நாக்கின் துளி இனிப்பு என்று இருந்தது உடல் எங்கும் பரவியது. உடல் சிலிர்த்தது. 

நான் ஈரம் வடியும் ஆடையோடு படியேறி அகத்தில் நுழையும் போது,  வசந்தம் விழுப்பு கலைந்து மடி உடுத்தி இருந்தாள். அடுக்களை கடந்து கூடத்தில் ஏறி இடது புறம் திரும்ப எத்தனித்து வலது காலை முன்புறத்தில் ஊன்றினாள். இடையே ஒரு 30 தப்படிகள் இருந்திருக்கும். அடுத்த அடி எடுத்து வைக்க இருவருக்கும் சில கணங்கள் ஆனது. வெக்கம் பூத்து சிவந்த முகத்தோடு கிழக்கு கூடச்சுவரில் மாடத்தில் ஏற்றியிருந்த கல் அகலை நோக்கிக்கொண்டிருந்தாள். நான் முகம் தாழ்த்தி அவள் சற்றே  திருப்பி ஊன்றியிருந்த அழுந்திய சிவந்த குதிகாலை நோக்கினேன். பின் நிமிர்ந்த போது, என் முகம் நோக்காமல் புன்னகைத்த படி, கூடத்தின் உள்ளே நுழைந்தாள் வசந்தம். அவள் அடுக்களை வாசல் கடந்த பின், வழியில் அவள் சிந்திச்சென்ற மஞ்சளின், திரவிய பொடியின் வாசனை அலையைக் கலைத்தபடி,  நடந்து அடுக்களை கடந்து கொல்லைபுறத்தில் ஈரம் களைய இறங்கினேன்.

***

கருத்துகள்

  1. தெய்வங்களின் வருணனை அருமை சகோ 👍

    பதிலளிநீக்கு
  2. மிகக்கச்சிதமாக, ஆயுர்வேத மரபின், சப்த தாது ஞானத்தையும், சாக்த மரபின், ரூபங்களையும்,யோக மரபின் குண்டலினி அனுபவத்தையும், இணைத்து சொல்வதற்கு. பெரும் ஞானமும்,கர்பனாசக்தியும், வாக் வல்லமையும் தேவை. அது இங்கே நிகழ்ந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஐயன் பந்தி - 17

ஐயன் பந்தி - 16

ஐயன் பந்தி - 19