இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐயன் பந்தி - 5

புவியேழையும் பூத்தவளே - 1 தாத்தா கேட்டார் ஐயரிடம் “உங்க வீட்லயும் வைத்தியம் உண்டாடா?” “இல்லடா கோவிந்தா, நம்மாத்துல வைத்தியம் இல்ல. கருப்பன் வந்து எல்லா விவரமும் சொன்ன பிறகு, என் பிதாமஹர்ல யாரோ ஒத்தர், தொண்டிக்கும் காரைக்குடிக்கும் எல்லாம் போய் பார்த்திருக்கா. அவர் தான் முன்னாடி ஆனேகுந்தில இருந்து வந்து கருப்பன் கிட்ட அடைக்கலம் ஆன கதை எல்லாம் தெரிஞ்சிண்டு வந்து சொன்னது. ஆனமந்தி வைத்தியர்  குடும்பம் பேரும் சீருமா நன்னா இருக்காளாம்  காரைக்குடில. சுப்பிரமணிய ஐயன், அவர் சன்னாசிட்டே இருந்து மந்திரம் வாங்கிண்டது, பதினோரு வருசத்துல வைத்திய சாஸ்திரத்த தெரிஞ்சிண்டது எல்லாத்தையும் 108 ஓலைல எழுதிவச்சிருக்கிறார். அவா ஆத்துல அந்த ஓலைக்கட்ட தலைமுற தலைமுறையா படி எடுத்து வச்சிண்டு, அதே முறைப்படி அடுத்தடுத்த தலைமுறைக்கு சொல்லியும் வைக்கிறா. அந்த படி ஓலையில ஒரு கட்ட என் பிதா மஹர் ரொம்ப பிரயாச பட்டு வாங்கிண்டு வந்தாராம். ஆனால் மந்திரம் இல்லாம வெறுமனே ஓலைய படிச்சா ஒன்னும் விளங்காதுனு சொல்லிட்டு கொடுத்தாளாம்.  தெலுகும், சமஸ்க்ரிதமும் கலந்து எழுதினது. அது மட்டும் நம்மாத்துல பூஜா முறியில உண்டு. ...

ஐயன் பந்தி - 4

வெளி - 2 ராமசுப்பைய்யர் ஆனமந்தி வைத்தியர் கதையை சொல்லி முடிக்கவும், வெற்றிலையையும் பாக்குகளையும் தட்டில் கொட்டி திண்ணை நடுவில் வைத்தாள் பாட்டி. ஐயரும், ஒரு சிறு பாக்கை நான்காக தட்டி வாயில் அதக்கிக்கொண்டு  வெற்றிலையை நரம்பு கிள்ளி சுண்ணாம்பு தடவிக்கொண்டிருந்தார். தாத்தா தான் ஐயரிடம் கேட்டார், "நீங்க  மலையாளத்துல இருந்துல வந்தவுக,  உங்க குலதெய்வம்  தொண்டிலையா இருக்கு?"  "அதையும் சொல்றேன் டா, கதைய கேளு" என்று மீண்டும் சொல்லதுவங்கினார் ஐயர். அதுவரையில் உலகமறியாத பெரும்பஞ்சம் ஒன்று வந்தது தொண்டிகரைக்கு. வயல் எல்லாம் பிளந்து மூச்சு விட ஆரம்பித்து விட்டது, பின்னர் சுனையும், கண்மாய்களும் கூட காய்ந்து பிளந்து விட்டன.  ஊரில் உள்ள ஒவ்வொரு மண்ணும்  தூசும் கூட 'நீர் நீர்' என்று ஓலமிட தொடங்கிவிட்டது. வற்றாத ராக்காச்சி சுனையும் இன்னும் வற்றவில்லை என்னும் அளவிற்கு சேறும் சகதியுமாக இருந்தது. விவசாயம் எல்லாம் அடியோடு போனது. குடி தண்ணீருக்கும் பெரும்பாடு. இரண்டு  சாம தூரம் நடந்து, பெண்டும் பிள்ளைகளும் கலங்கிய சேற்று சுனைகளில் தெளியவிட்டு தெளியவிட்டு அரைக்குடமோ ஒரு க...

ஐயன் பந்தி - 3

வெளி - 1 "மீனாட்சி, கொஞ்சம் மோர் இருந்தா எடு தாயீ" என்று ராமசுப்பையர் குரல் கேட்டு வீட்டிலிருந்து வேகமாக இறங்கி கோவிந்தன் தாத்தா வீட்டுக்கு போனேன். கோவிந்தன் தாத்தாவும் ஐயரும் பேசிக்கொள்வதே விசித்திரமாக இருக்கும். நல்ல நடு உச்சி பொழுதாகி இருந்தது. கீழ் புறம் திண்ணையில் ஐயர் உட்கார்ந்து காலை வெளியே தொங்கவிட்டு இருந்தார். தாத்தா மேல் புறம் திண்ணையில் எழுத்து மேசைக்கு முன்னாள் உட்கார்ந்து அவரை பார்த்துக்கொண்டு இருந்தார். பாட்டி மோரை பித்தளை லோட்டாவில் ஐயருக்கு கொடுத்துவிட்டு படியிலேயே அமர்ந்தாள். நான் பாட்டி அருகில் போய் அமர்ந்துகொண்டேன். பொதுவாக ஐயர்கள் அரிசியும் பருப்பும் தான் வாங்கிக்கொள்வார்கள். உணவோ, மோரோ  வாங்கி உண்ணமாட்டார்கள். ஆனால் ராமசுப்பையர் வித்தியாசமான ஆள். அவரை தாத்தாவும் பேர் சொல்லியே அழைப்பார், அதுவும் வழக்கத்தில் உள்ளதில்லை.  "ஐயமார்க எங்க வீடுகள்ல அரிசியும் பருப்பும் தான் வாங்குவாக, நீ என்னடா மோரக் கொடு நீச்சத்தண்ணியை கொடுனு வாங்கி குடிக்கிற" என்றார் தாத்தா. ராமசுப்பையர் வளர்ந்தவர், திண்ணையில் அமர்ந்து  கால்களை தரையில்  ஊன்றி இருந்தார், பெரும்பாலானவர...

ஐயன் பந்தி - 2

பந்தி வரிசை - 2 தாத்தா சொன்னார் "மழையில ஒவ்வொரு துளியும் மழையே தான, துளித்துளியா விழாம மொத்தமா விழுந்தா நம்மால தாங்க முடியுமா? அதனாலதான் துளி துளியா விழுது.  ஒரு துளி வயல்ல விழுது, ஒரு துளி சாக்கடைல விழுது, விழாம அந்தரத்தில் நிக்கிற வரை எந்த துளிக்காவது வித்தியாசம் இருக்கா ?  இது எல்லாம ஒன்னா வானத்தில மேகமா நின்னுச்சே அதுக்கும் இந்த துளிக்கும் என்ன வித்தியாசம்? அது மாதிரி இந்த தெய்வங்கள்ல சிலது மண்ணில முளைச்சு மேல வந்தது, சிலது வானத்துல முளைச்சு கீழ வந்தது, அந்தரத்தில் நின்னுட்டு இருக்குதுக. அது அத்தனையும் அந்த ஆதி மூலத்தோட ஒரு துளி தான், அந்த ஆதி மூலந்தான் நமக்காக துளித்துளியா பெய்து". பாட்டி மாடத்தில் விளக்கிட்டிருந்தாள், திண்ணையில் மஞ்சள் ஒளி பரவியிருந்தது. தாத்தாவுக்கு துணையாளாக மடி மடித்துக்கொண்டிருந்தேன். நான்கு துண்டு சேர்ந்தது ஒரு மடி. எப்போதும் போல லாவகமாக இரு எதிர் எதிர் முனைகளை இழுத்தும், பின் குறுக்கே கஜக்கோலை விட்டு இரண்டாக மடித்து,  ஓரத்தில் பிசிறு தட்டாமல் இருக்க, உள் தட்டை சரியாக ஒரு விரற்கடை அளவு உள்ளே ஒதுக்கி வைத்து  கச்சிதமாக, இரண்டாக மடித்து, பின்...

ஐயன் பந்தி - 1

பந்தி வரிசை - 1 உள்ளங்காலில் குளிரை உணர தலைவாசல் கல் படியில் ஊன்றி நின்று விட்டு,  ஒற்றை மரக்கதவின் மரை இளகிய மூன்றாவது குமிழை உருட்டி விட்டபடி படி இறங்கிய போது, கோவிந்தன் தாத்தா முக்கால் காலுக்கு பழுத்து சுருண்டு ஏறிய வேட்டியும், முறுக்கி பிழிந்து விட்டு தோளில் இட்டது போன்று கிடந்த பழைய வெள்ளை  துண்டுமாக  வடக்கு வீட்டிலிருந்து வந்து திண்ணையில் அமர்ந்தார். கோவிந்தன் தாத்தா வீடும் எங்கள் வீடும் எதிர் எதிர். அவர் எங்கள் தாத்தாவுக்கு பெரியய்யா மகன்.  கோவிந்தன் பெருசுக்கு எப்பவும் ஒரு எதுப்பு தான், எதிலும் அச்சம் இல்லை, கைத்திறமைக்காரர் என ஊரெல்லாம் பேச்சு. அவர் நெய்யும் சேலைக்கு மயில் கரையோ மாம்பிஞ்சு கரையோ இட்டார் என்றால் ஒரு பிசிரோ ஒரு இழுப்போ இல்லாமல் அத்தனை சுத்தம். மீனாட்சி பாட்டியை கட்டிய போது காஞ்சிவரம் போய்  பட்டு நூல் வாங்கி வந்து, பச்சை சாயம் முக்கி, ஒரு புடவைக்கு மட்டும் ஒரு பாவோடி, நூல் தறியை பட்டு நெய்வதற்கு ஏற்ப தானே விரித்து கட்டி, அவரே நெய்த புடவையில், பாட்டி கழுத்தில் திருப்பூட்டினாராம். ஓங்கு தாங்காக ஆண்பிள்ளைக்கு சமமாக எதுக்கும் அஞ்சாமல் எழுந்து ...